info@thehandofjesus.com

கட்டுரைகள்

                                          பாவத்தின்  சம்பளம் மரணம்


ஒரு குழந்தை பிறந்து முதிர் வயதினை அடைவதற்கு எத்தகைய படிமுறைகளை சந்திக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படுகின்றதோ அவ்வாறே ஒவ்வொரு மனிதனும் வாழ்கின்ற வாழ்க்கையில் பல்வேறு விதமான சவால்களை எதிர்நோக்குகின்றான்.

எண்ணங்கள், விவேகம், சிந்தனைகள், தர்க்கங்கள், அறிவு, யோசனைகள் இது போன்ற வார்த்தைகளை கவனித்து பார்ப்போமானால் இதில் யுத்த களமாக நமது மனமே காணப்படுகின்றது. மனித இனத்தின் மனங்களை அடிமை கொள்ள சாத்தான் பெரிய யுத்தத்தை நடத்துகிறான். சாத்தான் மனிதர்களின் மனதில் பலத்த கோட்டைகளையும் அரண்களையும் ஏற்படுத்துகின்றான். தேவனுடைய பிள்ளைகளையும் விட்டு வைக்க நினைப்பதில்லை. அவனது நோக்கத்தில் முறையாகவும் மக்கள் மனதில் பலத்த தவறான கொள்கையின் கோட்டைகளை கட்டி நிறுத்துகிறான். இத்தகைய அரண்களை தகர்த்தெறிவது எப்படி என்பதை பரிசுத்த வேதாகமம் வலியுறுத்தி நிற்கின்றது.

ஒவ்வொரு மனிதனும் தனிப்பட்ட வாழ்க்கையில் பாவத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றான். அத்தகைய பாவச் செயல்களைப் பற்றி நாம் சிறிது நாம் உற்று நோக்கினால் களவும், பொய்யானையிடுதலும், பெலவீனர், உதவியற்றோர்களுக்கு எதிரான அநியாயம், தவறான அல்லது இயற்கைக்கு முரணான பாலுறவு, பெற்றோரை கனவீனப்படுத்துதல், கீழ்ப்படியாமை, விக்கிரக ஆராதனையும், மாய்மாலமாக ஆண்டவரோடு உறவுவைத்திருப்பதும் இன்னும் இவ்வுலகில் அருவருப்பான செயல்களை குறிப்பிட்டு சொல்ல முடியும்.

வேதாகமத்தின் அடிப்படையில் சிறிய செயலாக இருந்தாலும் பெரிய செயலாக இருப்பினும் பாவம் பாவமே எனலாம்.
“எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்களாகி” என்று வேதாகமம் ரோமர்3:23ல் குறிப்பிட்டுள்ளதற்கிணங்க ஒவ்வொரு மனிதனும் பாவம் செய்து தேவனிடமிருந்து தூர நிற்பதனை பறைசாற்றுகின்றது. மேற் கூறப்பட்டதனைப் போன்று பாவத்தின் சம்பளமாகிய மரணத்தினை ஜீவனாக மாற்றிக் கொள்ள ஒரு வழி உண்டு.

மனுகுலத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தேவன் வெவ்வேறான தீர்வுகளை அளிக்கவில்லை மாறாக எல்லாப் பிரச்சனைகள், பாவங்களுக்கு ஒரு முழுமையான தீர்வை தேவன் அளிக்கின்றார். இத்தகைய தீர்வைப் பெற நாமெல்லாரும் ஒரே இடத்திற்குதான் செல்ல வேண்டும். இயேசுவின் சிலுவை. “நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழிதப்பி திரிந்து அவனவன் தன்தன் வழியிலே போனோம். கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழ பண்ணினார்” நாம் அவருடைய ஜீவனில் பங்கடையும்படி இயேசு நம்முடைய பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை அவர் தன் மேல் சுமந்து சிலுவையில் மரித்தார். ஆகவே ஒவ்வொரு மனிதனும் பாவத்தை விட்டு விலகி கிறிஸ்துவின் அன்பை உணர்ந்தவர்களாய் அவரை விசுவாசித்து அவருக்காக வாழ்ந்து வாழ்வில் செழிப்படைந்து பரலோகத்தில் பங்கடைவோம்.

“கிறிஸ்தவனாக வாழ்வதைவிட கிறிஸ்துவுக்காக
 வாழ்ந்துபார் நித்திய ஜீவ கிரீடம் உனக்கே”   

எழுத்துருவாக்கம்:- k.கவிதா
சபை:- ஜெப ஆலய மிஷன்
முகவரி:- கரடிப்பிலவு நெடுங்கேணி