எங்களை பற்றி...
தேவனுக்கு பிரியமான சகோதரரே,
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அளவிட முடியாத அன்பினாலும், கிருபையினாலும் பிரசவித்த இவ்விணையத்தளத்தினூடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவையே நாடுங்கள். கொலேசெயர் 3:2 மேற்குறிப்பிட்ட வேத வசனத்தின்படி. உலக சினேகிதம் கொள்ளாமல், நம்மை உண்டாக்கியவரும், நமக்காக தம் ஜீவனையே கிரயமாக செலுத்தி நம்மை மீட்டுக்கொண்டவருமான அவருக்கு நன்றியுள்ளவர்களாகவும், உண்மையுள்ளவர்களாகவும் வாழ்வதோடு நின்றுவிடாமல், அவருடைய உள்ளத்தின் வாஞ்சையை நிறைவேற்றுகிற பிள்ளைகளாக, அவருடைய இராஜ்ஜியம் கட்டப்பட அவருக்கு (இயேசுக்கிறிஸ்துவுக்கு) பணி செய்வதே எமது ஊழியத்தின் பிரதான தரிசனம். அந்த பணியின் ஒரு பகுதி தான் இவ்விணையத்தள வெளியீடு.
1.வேதாகம கல்வி
எமது பிள்ளைகளும், பின்வரும் சந்ததியினரும் தேவனுக்கு பயந்து அவரை சார்ந்து அவருக்குப் பிரியமாக வாழ வேண்டும். அனுதினமும் வேதத்தை கற்று பக்திவிருத்தியடைய வேண்டும் என்பதே எமது பேரவா.
தினமும் வேதத்தை வாசித்த பின்னர் இத்தளத்தில் தினசரி தியானம் என்ற பகுதியின் கீழிருக்கும் வேதபாடங்களை தினசரி தியானிப்பதினூடாக வேதம்படிப்பதை வளக்கமாக்கிக் கொள்வதோடு, வேத அறிவையும் வளர்த்து தேவ உறவில் நிலைத்து நிற்கலாம். இவ்வனுபவமானது சந்ததி சந்ததியாக தொடர்ச்சியாக கடைப்பிடிக்கப்படும் பட்சத்தில் பக்கிவைராக்கியமுள்ள சந்ததியை உருவாக்க முடியும்.
எனவே பெற்றோர்களே வேதப்படிப்பானது அன்றாட வாழ்க்கையில் அத்தியாவாசியமானதொன்றாக கருதி உங்கள் பிள்ளைகளுக்கு பொருத்தமான பாடத்தை தெரிவு செய்து படிக்க வையுங்கள்.
பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர் வயதிலும் அதை விடாதிருப்பான். நீதிமொழிகள் 22:6
2. பிறருக்கு உதவுதல்.
கிறிஸ்தவமானது ஒருபக்கம் தேவனுக்குப் பிரியமாக வாழ்வதோடு மறுபக்கம் பிறருக்கு உபயோகமாக வாழ்வதேயாகும். இவ்விரண்டும் சமநிலையில் பயணிப்பதினூடாகவே வெற்றியுள்ள கிறிஸ்தவ ஜீவியத்தை அனுபவிக்க முடியும்.
என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்பு கூரக்கடவோம். 1யோவான் 3:18 இவ்வேத வசனத்தின்படி வாழ பிரயாசப்படுவோம்.
தேவைகள் நிறைந்த, அடிப்படை வசதிகளற்ற சபைகளில், உண்மையாக ஆராதிக்கும் தேவப் பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்யவும், சமூகத்தில் வாழும் ஏழை எளிய திக்கற்றவர்கள் விதவைகள் பலவீனமானவர்களின் தேவைகளும் சந்திக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், தேவையுள்ளோரின் விபரங்களை இத்தளத்தில் பதிவு செய்வோம்.
நீங்கள் தேவனால் உந்தபட்டு உதவி செய்ய விரும்பினால், எங்களை தொடர்பு கொள்ளலாம். நீங்கள் அவர்களின் முழு விபரத்தையும் பெற்றுக்கொண்டு நீங்களாகவே உதவலாம்.
இன்றைய காலகட்டத்தில் உதவிசெய்வது மிகவும் இலகுவாக (நேரில் செல்லாமல் இணையதளத்தின் வழியாகவே) இருந்தாலும், உண்மையான தேவையுள்ளவர்களையும், சரியான நபர்களையும் இனங்காண்பதே கடினமானது. அந்த பணியையே இயேசுவின் கரம் ஊழியமாக செய்கிறது.
உதவி செய்ய வாஞ்சிக்கிற பிள்ளைகள், நீங்களாகவே தேவையுள்ளோரை தொடர்பு கொண்டு அத்தேவையை பூர்த்தி செய்யலாம். அவ்வாறு செய்யும் பட்சத்தில் அது உங்கள் நற்கிரியை, உங்கள் ஊழியம், உங்கள் தரிசனமாக அமையும்.
தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.
சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். ரோமர் 2:6-7 .
மேற்குறிப்பிட்ட சத்திய வசனத்துக்கமைய உங்கள் வாழ்கை அமையட்டும்.
3.ஆவிக்குரிய வளர்ச்சி.
தாலந்துகள் திறமைகளுடன் பல தேவப்பிள்ளைகள் சபைகளில் இருக்கிறார்கள்.
சபைகளில் எல்லோருக்கும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. சகோதரர்கள் உங்கள் ஆக்கங்களை எழுதி அல்லது ஒலிப்பதிவு செய்து அனுப்பினால் தகுதியானவற்றை முடிந்தளவு வெளிக் கொண்டுவர பிரியப்படுகிறோம். ஆக்கங்களை அனுப்பிவையுங்கள்.
ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.
1தெசலோனிக்கேயர் 5:11
வேதாகம கல்வி, பிறருக்கு உதவுதல், ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவுதல்.
இம்மூன்றையும் மையப்படுத்தியே இவ்விணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாமனைவரும் இணைந்து செயற்பட்டு இயேசுக்கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப்படுத்துவோம்.
இயேசுவின் கரம் ஊழியமாவது 2012 காலப்பகுதியில் இலங்கையின் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பணியை ஆரம்பித்து இன்று இலங்கையின் அனைத்து பாகங்களுக்கும் பணிசெய்ய கர்த்தர் உதவி செய்தார்.
இவ்வளவு காலமும் கர்த்தர் ஒரு குடும்பத்தை போஷித்து அதிலிருந்து கிடைக்கும் ஆதாயத்திலிருந்தும், அர்ப்பணிப்பு தியாகம் நிறைந்த பல சகோதரர்களின் ஒருமனப்பட்ட செயற்பாட்டாலுமே இயங்கிக் கொண்டிருக்கிறது. இறுதிவரையும் இந்நிலையிலிருந்து
மாறாது. தேவனுக்கு பிரியமான பணிவிடைகாரனாக ஓட்டத்தை ஓடி முடிக்க தினமும் எங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
நன்றி
பணிவிடைகாரன்
த.பிரபா |