ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

இருளைக் கிழித்துக்கொண்டு பிறந்த பேரொளி.

 


உலகம் எப்பொழுதும் டிசம்பர் மாதத்தில் நத்தார் புத்தாண்டை விமர்சையாக கொண்டாட ஆரவாரப்பட்டுக் கொண்டிருக்கும். பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்காக சமூக நிர்வாகமும் வேலைத்தளத்திலிருந்தும், பாடசாலைகளிலிருந்தும் விடுமுறை கொடுத்துவிடுவார்கள். அன்பளிப்பு கொடுப்பதிலும் விருந்துபசாரத்திலும் களியாட்டத்திலும் உலகத்து மக்கள் மூழ்கிப் போயிருப்பார்கள். கிறிஸ்துவின் பிறப்பை ஏன் கொண்டாடுகிறோம் என்ற அடிப்படை அறிவு கூட கிடையாது. கிறிஸ்து என்பவர் யார்? எதற்கு இந்த பூமியில் பிறந்தார் என்பதை அறிந்து கொள்ளவும் விரும்புவதில்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அது ஒரு பண்டிகை, அது ஒரு சடங்கு, அன்நாளில் அலங்கரித்து, உண்டு, குடித்து மகிழ்வாயிருப்பதாகவே கருதி செயல்படுகிறார்கள். பிசாசு மக்களை இருளுக்குள் வைத்திருக்கிறான். இந்த இருளில் இருப்பவர்களை மீட்கவே, இருளைக் கிழித்துக்கொண்டு பேரொளியானவர் மனுசனாய் பிறந்தார் (வந்தார்) பிரகாசித்தார்.

 

ஆவிக்குரிய உலகமும் உண்மையாய் கிறிஸ்துவின் பிறப்பை உணர்ந்து செயலாற்றுகிறது. அவ்வாறு செயல்படுவோரின் விகிதாசாரம் எவ்வளவு என்பதே பெரிய கோள்வி? நத்தார் பாடல் ஆராதனை என விஷேசித்த ஆராதனையை ஒவ்வொரு சபையும் அனுசரிக்கிறார்கள். இதற்காக இரண்டுமாதங்கள் கடும்பயிற்சியில் ஈடுபடுவார்கள். அந்த நிகழ்ச்சி நிரலில் பாடல், நடனம், நாடகம் வார்த்தை என்பன உள்ளடக்கப்பட்டிருக்கும். தெரிவு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் எவ்வளவு ஆவிக்குரிய சாரம் உள்ளதென்று எனக்கு தெரியவில்லை. வலைத்தளங்களில் காணப்படும் கிறிஸ்தவ நிகழ்ச்சிகளை பிரதியேடுத்து (copy) அவற்றை நடைமுறைப்படுத்தும் கலாச்சாரமே அநேக சபைகளில் காணப்படுகிறது. வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து, சொந்தமாக சிந்தித்து பாடல்கள், நடனங்கள், நாடகங்களை தாயரித்து நடைமுறைப்படுத்துவது சிறந்தது. 

ஒரு போதகர் ஞாயிறு ஆராதனைக்கு வார்தையைக் கொடுக்க முன், தேவனின் பாதத்திலிருந்து ஜெபித்து வார்த்தையை பெற்றுக் கொண்டுவந்து கொடுப்பார். அது போலவே நத்தார் புதுவருட விஷேச ஆராதனை நிகழ்ச்சிகளை தேவனின் பாதத்திலிருந்து ஜெபித்து தெரிவு செய்வதும் நல்லதே. 

ஆட்டம் பாட்டம் களியாட்டம் போல் அல்லாமலும் சபையின் வலுநிலையை பிறருக்கு வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாகவும் திட்டமிட்டு விளம்பரப்படுத்தி செயலாற்றுவதை அவதானிக்க கூடியதாய் உள்ளது. (ஐரோப்பாவில்). 

சபை போதகர்கள் ஒருவர் இந்த முறை சிறப்பாக பாடினார்கள், இசை பிரமாதமாய் இருந்தது, உணவு சுவையாக இருந்தது, நால் ஜனக்கூட்டமாயும் இருந்ததென சொல்லக் கேட்டிருக்கிறேன். இவர்களுடைய வாயறிக்கையானது, பண்டிகையை விமர்சையாக கொண்டாடி விட்டோம் என்பதாகும். மாம்சப்பிரகாரமாய் சிந்தித்து சுயதிருப்தி கொள்வோருக்காக பரிதாபப்படுகிறேன்.  தேவனுடைய பார்வையில் பண்டிகைக்கும், களியாட்டங்களுக்கும், பெருமைக்கும் ஆவிக்குரிய பெறுமானம் பூச்சியமே. பிற சபைகளில் இருந்து நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க போவோர், அன்பின் நிமிர்த்தம் நல்லதோர் ஐக்கியத்தை ஏற்படுத்தும் எண்ணத்தோடு போக வேண்டும். குறைநிறைகளை கணிப்பிட மாய்மாலமான உள்ளத்தோடு போவதை தவிர்க்க வேண்டும். ஏசாயா தீர்க்கதரிசி இன்றில்லாமல் போய்விட்டாரே எனக் கவலைபட வேண்டியுள்ளது.

கிறிஸ்தவ குடும்பங்களும் பண்டிகைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஆடம்பரமான விலையுயர்ந்த உடைகளை, பரிசுப் பொருட்களை, வீட்டு அலங்காரங்களைச் சொய்வது சிறந்ததல்ல. மாறாக இயேசுக்கிறிஸ்து பிறந்ததன் நோக்கத்தை அறிந்து, தாழ்மையாக, உணர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என மரியாள் சென்னதாக லூக்கா1:38ல் வாசிக்கிறோம். சுயாதீனமற்றவராய் இன்னொருவரின் அபிலாசைகளுக்கு ஏற்ப வாழுவதே அடிமை என்பதாகும். பண்டைய காலங்களில் அரசுகள், எஜமானிகள், குறுநில மன்னர்கள் மக்களை வலுக்கட்டாயமாக பிடித்துச் சென்று வேலைவாங்குவார்கள். அடிமைகளுக்கு எந்த ஊதியமும் கிடைக்காது. நேரம் காலம் பாராது விலங்கு போல பணி செய்ய வேண்டும்.

லூக்கா 1:38 ல் மரியாள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் யாருக்குச் சொன்னார்?

மரியாள் வீட்டில் இருந்த பொழுது, தேவதூதன் தோன்றி மரியாளை கிருபை பெற்றவளே வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என வாழ்த்தினான். அத்தோடு நீ ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும். அவர் பெரியவர், உன்னதமானவரின் குமாரன் எனப்படுவார், தாவீதின் சிங்காசனத்திலிருந்து இஸ்ரவேலரை ஆளுகை செய்வார், அவருடைய ராஜ்ஜியத்துக்கு முடிவிராதெனச் சொன்னான். இப்பொழுது மரியாள் யார்? முடிவில்லா ராஜ்ஜியத்தை ஆளுகை செய்யப் போகிற ராஜாவுக்கு தாயாகப் போகிற பெண்மணி. மரியாளோ பெருமையோ, தலைக்கனமோ அற்றவளாய் மனத்தாழ்மையோடு நான் ஆண்டவருக்கு அடிமை என்று சொன்னாள்.

கிருபை பெற்றவர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்துவார்கள். நீங்கள் எப்படி?

நீதிமானாகிய யோசேப்பு மரியாளுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தார். நீதியை வாழ்வில் கடைப்பிடிப்பவர்களை, நீதிமான் என்றழைப்பார்கள். மரியாள் கர்ப்பமாயிருப்பதை அறிந்த யோசேப்பு கோபங் கொண்டு ஊரைக் கூட்டி தனக்கு நீதி கேட்கவோ அல்லது மரியாள் அன்னியரால் தண்டிக்கப்படுவதையோ விரும்பவில்லை. அவருக்கு தெரியும் மரியாள் தப்பு பண்ணும் பெண்ணல்ல, ஆனால் ஏதோ நடந்து விட்டதென நினைத்து, இரகசியமாக விவாகரத்து பண்ணிக்கொள்ள நினைக்கிறார். இப்படி நினைத்துக் கொண்டே தூங்கிவிட்டார். அப்பொழுது கனவில் தேவனுடைய தூதன் தோன்றி, மரியாளை சேர்த்துக்கொள்ளும்படி சொன்னார். கனவில் அவருடைய எல்லாக் கேள்விகளுக்கும் விடைகிடைத்துவிட்டது, கர்ப்பவதியாகிய மரியாள் வீட்டுக்கு சென்று, மரியாளுக்கு நல்ல பாதுகாவலனாயும், பணிவிடைக்காறனாயும் பாசத்தோடு செயலாற்றினார். இயேசுக்கிறிஸ்து பூமிக்கு வரமுதலே, பாவிகளை நேசிக்கும் உள்ளம் கொண்டவராய் யோசேப்பிருந்தார். 

நீதிமான்கள் பாவிகளை நேசித்து பாவத்தை வெறுப்பார்கள். நீங்கள் எப்படி?

இந்த நாட்களில் ரோமப் பேரசு தனது காலாணித்துவ நாடுகளில் உள்ள மக்களிடம் வரியை கிரமமாக அறவிடும் நோக்கோடு, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்கள் தொகையை கணக்கெடுப்பதற்காக, அவர்கள் விபரங்களை திரட்டுவதற்காக, அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்று விபரங்களை பதிவு செய்யும்படி கட்டளையிட்டனர். யோசேப்பு பெத்லகோம் ஊரைச் சேர்ந்தபடியால் அவர் அவ்வூருக்கு சென்று குடிமதிப்பெழுத புறப்பட்டார். நீதிமானாகிய யோசேப்பு ராஜ்ஜியத்தின் சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படிந்து நடந்தார். 

மரியாளை நாசரேத்தூரில் விட்டு விட்டு போகாமல் தன் கூடவே பெத்லகேமுக்கு அழைத்துச் சென்றார் யோசேப்பு. இந்த பயணத்தின் தொடர்ச்சியாய், இதற்கு பின் நடக்கப்போகும் சம்பவங்களையுமே, கிறிஸ்துவின் பிறப்பெனக் கொண்டாடும் இன்றைய நாட்களில் (இக்கட்டுரை டிசம்பர் 24 எழுதப்பட்டது) தியானிப்பது பொருத்தமானது. 

2016 ஆண்டுகளுக்கு முன்னர் இயேசுக்கிறிஸ்து பிறந்த சூழலை மனக்கண்களுக்கு முன் கொண்டு வந்து தியானிக்கும் பொழுது. உள்ளம் உடைந்து போவீர்கள். பாலகன் இயேசு, யோசேப்பு, மரியாள் போன்றோரின் அடிப்படை வசதியற்ற வாழ்நிலையை சிந்திக்கும் போது கண்கள் குளமாகிவிடும்.

நிறைமாத கர்ப்பிணியும் யோசேப்பும் நாசரேத்தூரில் இருந்து பெத்லகேம் போவதற்கு குறைந்தது 80 மைல் நடந்திருப்பார்கள் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். நாசரேத்துக்கும் பெத்லகேமுக்கும் இடைப்பட்ட தூரம் 70 மைலாகும். யோசேப்பும் மரியாளும் நேர்கோட்டில் பயணிக்காமல், மலைகள் குன்றுகள் குழிகள் என சீரற்ற பாதையில் வழைந்து, சுற்றி, ஏறி, இறங்கியென 80 மைலுக்கு மேல் நடந்திருப்பார்கள். நாலு நாளில் போகக் கூடிய பெத்லகேமுக்கு இவர்கள் இருவருக்கும் ஆகக் கூடியது ஏழு நாளாவது எடுத்திருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இன்றைய நாட்களில் இருப்பது போல மோட்டார் வண்டியற்ற நாட்களவை, கால்நடைகளை பயணத்துக்கு உதவியாக பயன்படுத்தும் காலமாகையால், மரியாளும் யோசேப்பும் கழுதையை பயன்படுத்தி இருப்பார்கள். அக்கழுதையில் தங்களுக்கான உணவு, தண்ணீர், உடை போன்றனவற்றை பொதி செய்து போட்டிருப்பார்கள். மரியாள் கூடவே குழந்த இயேசுவுக்கான புதிய சட்டைகள் இரண்டு மூன்றை எடுத்து வந்திருப்பார்கள். 

கர்ப்பிணி பெண்களுக்கென விஷேச உணவுகள் கொடுப்பார்கள். மரியாள் விஷேசித்த ஊட்டச்சத்துள்ள உணவை நாசரேத்தில் சாப்பிட்டிருந்தாலும். பிரயாண காலத்தில் சாப்பிட்டிருக்க முடியாது. வழியோரங்களில் உணவகங்கள் அரிதாகவே இருந்திருக்கும். பொதி செய்து கொண்டுவந்த உணவை சிக்கனமாகவே இருவரும் சாப்பிட்டிருப்பார்கள். பிரயாணத்தின் பொழுது களைப்பேற்படும் வேளையில் ஓய்வெடுத்து ஓய்வெடுத்து பிரயாணப்பட்டிருப்பார்கள். வீடுகளில் அல்லது விடுதிகளில் தங்கி பிரயாணப்பட்டிருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. வீதியோர மர நிழல்களில் கூடுதலாக ஓய்வெடுத்திருப்பார்கள் உறங்கியிருப்பார்கள். கர்ப்பிணிகளுக்கு போதியளவு ஓய்வும் உறக்கமும் தேவை. பிரயாண காலத்தில் மரியாளுக்கு அது கிடைத்திருக்காது. மோசமான காலநிலையை எதிர்கொண்டு பயணம் செய்திருப்பார்கள். கழுதையில் உட்கார்ந்திருப்பதென்பது சாதாரண கார் இருக்கையில் சார்ந்திருப்பது போலால்ல. சார்ந்திருப்பதற்கு எந்த பகுதியும் இருந்திருக்காது. இயல்பாகவே கர்ப்பிணிகளுக்கு முதுகுவலி வயிற்று வலி என்பன இருந்து கொண்டே இருக்கும். இப்பிரயாணத்தின் பொழுது மரியாளுக்கு அது அதிகரித்திருக்கும். 

மரியாளும் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறதென அடிக்கடி யோசேப்பை கேட்டிருக்க கூடும். மரியாள் கழுதையில் இருக்கமுடியாமல் வளைந்து நெளித்து அசௌகரியப்பட்டு சங்கடப்படும் போது, யோசேப்பதை பார்த்து அதிக மனவருத்தப்பட்டிருப்பார். பிள்ளை பிரசவத்துக்கு முன் ஏற்படும் வலியானதை தாங்கமுடியாமல் இருக்கும்.

மரியாளுக்கும் இந்த வலி பெத்லகேமை நெருங்க நெருங்க அதிகரித்துக் கொண்டே போனது. 

மரியாள் இதற்கு மேல் முடியாது யோசேப்பென அழுது சொல்லுமளவுக்கு வலியுச்சத்தை தொட்ட போது, இருவரும் ஜெபித்து ஜெபித்து பெத்லகேமின் எல்லைக்குள் நுழைந்தார்கள். பெத்லகேமில் உள்ள உறவினர் வீட்டிலேயே இருவரும் போய் தங்குவதாகவே ஆரம்பத்தில் யோசேப்பு திட்டமிட்டிருப்பார். இரவானபடியாலும், மரியாள் நடக்கவோ உட்கார்ந்திருக்கவோ முடியாத நிலையில் யோசேப்பால் அந்த இடத்தை விட்டு நகரவே முடியாதிருந்தது. எனவே அவர் பக்கத்தில் இருந்த சத்திரத்தில் இடம் கேட்டார். அங்கு இடமில்லை என்றார்கள். பக்கத்தில் இருந்த வீட்டுக்கதவுகளை தட்டி உதவி கேட்டிருப்பார். அவர்களும் முடியாதென்றிருப்பார்கள். யோசேப்பு பதட்டத்தின் உச்சத்துக்கே போயிருப்பார். எங்கே ஒரு சிறுதுண்டு இடம் கிடைக்கும் என்று அங்குமிங்கும் தேடிப் பார்த்த வேளைதான் அவருடைய கண்ணுக்கு தென்பட்டது ஒரு குகை, அது கால்நடைகளை பராமரிக்குமிடமாக (தொழுவம்) இருந்தது. (ஒருவேளை யோசேப்பின் நிலையை கவனித்துக் கொண்டிருந்த யாராவது தொழுவத்தை காட்டியிருந்திருக்க கூடும்). 

தொழுவத்தில் மாடுகள் ஆடுகள் கழுதைகள் போன்றன கட்டப்பட்டிருந்தது. அப்பிராணிகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அவற்றிலிருந்து துர்நாற்றம் வீசியது. அப்பிரதேசமானது வைக்கோலும் புல்லும் குப்பையுமாய் கிடந்தது. ஒருமுனையில் இருந்து மறுமுனைக்கு எலிகள் ஓடித்திருந்தன. ஈக்கள் நுளம்புகள் பறந்து திரிந்தன. இவையெல்லாம் யோசேப்புக்கோ மரியாளுக்கோ பெரிதாக படவில்லை. எந்த ஒரு மனுஷனுக்கும் தொந்தரவு சொய்யாதபடி ஒரு இடம் கிடைத்ததே போதுமென்றாகிவிட்டது.

அந்த தொழுவத்தின் ஒரு பகுதியிலேயே உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கப் போகிற தேவ குமாரன் பிறந்தார்.

அவருக்கு தொட்டிலும் இல்லை பஞ்சு மெத்தையும் இல்லை. மரியாள் கட்டிலில் படுக்கவுமில்லை. அடிப்படை வசதிகளற்ற எளிமையான சூழலில் ஏழ்மையாக பிறந்தார். மீகா 5:2 தீர்க்கதரிசனம் நிறைவேறியது. 

யாருக்கா இப்படிப்பட்ட நிலையில் வந்தார். எனக்கும் உங்களுக்காகவுமே.

பிரியமானவர்களே!

இன்று சொகுசு தொட்டிலில் பிறந்து, பஞ்சு மெத்தையில் வளர்ந்து, கம்பிக் கட்டிலில் படுத்துறங்குகிறோம். அன்று மாட்டுத் தொழுவத்தில் பிறந்தவரின் தயவால் என்பதை மறந்துவிடக் கூடாது.

அவரின் பிறப்பை (வருகையை) விமர்சையாக கொண்டாடி விருந்துண்கின்றோம்.

நத்தார் தினத்தன்று வீட்டுக்கு யாரை அழைக்கலாம், என்ன சமைக்கலாம், எந்த உடுப்பு போடலாம் என்பதிலேயே முழுக் கவனமும் இருக்கும். 

கிறிஸ்து பிறந்த இந்த நாட்களில் யோசேப்பு மரியாளின் தியாகத்தை கட்டாயம் தியானிக்க வேண்டும். அன்று மரியாள் கருவில் கிறிஸ்துவை சுமந்து சொல்லெண்ணா துயரங்களை சந்தித்தாள். இன்று நாங்கள் கிறிஸ்துவை இதயத்தில் சுமந்து பாடுகளையும் நிந்தைகளையும் மனத்தாழ்மையோடு எதிர்கொண்டு, தேவனுக்கு பிரியமாக வாழ்ந்து அவரின் நோக்கத்தை நிறைவேற்றுவோமாக.

மரியாளைத் தேவதூதன் கிருபை பெற்றவளே வாழ்க என வாழ்த்தினார். தேவன் எங்களையும் கிருபையில் ஐஸ்வரியவான்களாக்குவாராக. 

யோசேப்பு சுய கட்டுப்பாடுள்ள மனுஷனாய், ஆதாயம் ஒன்றும் எதிர்பாராமல் மரியாளுக்கு வேலைக்காறன் போல் செயலாற்றினார். கிறிஸ்துவுக்கு தொண்டாற்றும் ஊழியக்காறர் யோசேப்பை போல நீதிமானாகவும் ஆதாயம் எதுவும் எதிர்பார்க்காத தியாக உள்ளத்தோடும் பணிசெய்ய வேண்டும். 

யோசேப்பு மரியாளின் தியாகத்தை மட்டுமல்ல தேவகுமாரன் பிறந்த நோக்கத்தையும், இடத்தையும் தவறாது தியானிக்க வேண்டும். 

அண்ட சராசரங்களையும் ஜீவராசிகளையும் படைத்த ஜீவாதிபதி, அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறவர். உன்னதங்களில் மகிமையாய் வீற்றிருந்தவர். எங்கள் ஒவ்வொருவர் மீது கொண்ட அளவற்ற அன்பினால் அக்கறையால் எங்களை மீட்கும்படி இப்பூமிக்கு மனுஷனாய் வந்தார். அவர் ஒரு அரண்மனையிலேயோ வசதியான வீட்டிலேயோ குடிசையிலேயோ பிறக்கவில்லை. 

ஒட்டுமொத்த மனுக்குலத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கவேண்டியவராயிருந்தார். இந்த பூமியில் பிறந்த எந்த ஒருமனுஷனைக்காட்டிலும் கடை நிலையிலேயே பிறந்து, தனது உண்மையான அன்பை வெளிக்காட்டினார். எப்படி கிறிஸ்துவின் சிலுவை மரணத்துக்கு நாங்கள் ஒவ்வொருவரும் காரணமோ அது போலவே அவரின் எளிமையான பிறப்புக்கும் நாங்கள் ஒவ்வொருவரும் காரணமாகிறோம். அசுத்தமான இடத்தில் பரிசுத்தமான தேவன் பிறந்ததானது, பாவம் நிறைந்த மனிதனின் இருதயத்தில் வாசம் செய்வதற்கு நிகராகும். மத்தேயு 8:20 ல் இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப்பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார். ஆரம்பத்திலிருந்து முடிவு வரை வாழ்ந்து காட்டினார். இயேசுக்கிறிஸ்து அப்படி வாழ்ந்ததாலேயே இன்று நாங்கள் சமதானமாக, பாதுகாப்பன, வசதியான வீட்டில் படுத்துறங்குகிறோம்.

இயேசுக்கிறிஸ்து முப்பது வயதுவரை மரியாள் யோசேப்போடு வீட்டிலேயே வசித்தார். அதற்கு பல காரணங்கள் உண்டு. அதிலொன்று தனக்காக அநேக பாடுகள் அனுபவித்த யோசேப்பையும் மரியாளையும் பாசத்தோடு பராமரித்து மகிழ்சியாக வாழ வைத்தமையேயாகும்.

சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போதும் மரியாள் கண் கலங்குவதை கண்டு அதற்கு பரிகாரம் சொன்னவர் இயேசு.

தனது பிள்ளைகள் மகிழ்ச்சியான சுபீட்சமான வாழ்வை அனுபவிக்க வேண்டும், தன்னோடு நித்திய நித்திய காலமாய் வாழ வேண்டும் என்ற உயரிய எண்ணம் கொண்ட பரமதகப்பன். நாங்கள் இரட்சிக்கப்பட (மீட்க) தன்னையே தாழ்த்தி எளிமையாய், ஏழ்மையில் பிறந்தார்.  அவர் பிள்ளைகளாகிய நாங்கள் எங்களை நாங்களே தாழ்த்தி, மரியாள் சொன்னது போல நாங்களும் ஆண்டவருக்கு அடிமையென வாயறிக்கை பண்ணி. அவர் சித்தம் செய்ய எங்களை விட்டுக்கொடுப்போம். 

பகட்டுக்கும், பந்தாவுக்கும் பண்டிகை கொண்டாடி ஆடம்பரமான வாழ்க்கை வாழுவதை தவிர்ப்போம். ஆவிக்குரிய, அறிவுள்ள காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.

இயேசு கிறிஸ்துவே இரட்சகர் என்பதை பறைசாற்றுவோம்.

இருளில் இருப்போர் வாழ்வில் ஓளி வீச பிரயாசப்படுவோம்.

எங்களைவிட தாழ்நிலையில் இருக்கும் உறவுகளை நேசித்து, அவர்களுக்கு உதவி செய்து, அவர்களின் வாழ்நிலையை உயர்த்தப் பாடுபடுவோம். 

அதுவே இன்நல்நாளில் நாமெல்லோரும் எடுக்கும் நல்ல தீர்மானமாக இருக்கும்.

உங்கள் பண்டிகைகளைப் பகைத்துவெறுக்கிறேன்; உங்கள் ஆசரிப்புநாட்களில் எனக்குப் பிரியமில்லை. ஆமோஸ் 5:21

நன்றி கர்த்தாவே

த.பிரபா.

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved