ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

உண்மையுள்ளவன்.


என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன். எண்ணாகமம் 12:7 ல் இவ்வாறு மிரியமையும் ஆரோனையும் பார்த்து கர்த்தர் சொல்லுகிறார்.
மோசேயின் உடன்பிறப்புக்களான மிரியமும் ஆரோனும் எரிச்சல், பொறாமையின்பால் மோசேக்கு விரோதமாய் பேசிய போதும், அதைக்குறித்து மோசே கர்த்தரிடம் முறையிடவுமில்லை, தர்க்கிக்கவுமில்லை, கோபிக்கவுமில்லை. அவர் சாந்த குணமுள்ளவராயிருந்தார். உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டை, அவதூறைக் கேட்ட கர்த்தர், மிரியமையும் ஆரோனையும் கூப்பிட்டு மோசேயின் நற்குணத்தை எடுத்துரைத்து, அவர்களைத் தண்டித்தார். கர்த்தரே உண்மையுள்ளவனென நற்சாட்சி கொடுக்குமளவுக்கு மோசேயின் வாழ்விருந்தது.

பொதுவாக உண்மையுள்ளவன் என்பதானது, தவறு செய்யாது வாழ்பவன் என்று பொருள்படும். உள்ளத்தில் இருந்து வருவது உண்மையாகவும், வாயிலிருந்து வருவது வாய்மையாகவும், செயல் ரீதியாய் வருவது மெய்மையென்றும் தமிழ்மொழியில் ஒவ்வொன்றுக்கும் தனித் தனி பொருளுண்டு. ஆனால் நடைமுறை வாழ்வில் இவ்வாறு பிரித்து வாய்மை, மெய்மை, உண்மையென யாரும் பயன்படுத்துவதில்லை. பொதுவாக சிந்தையாலும், பேச்சாலும், செயலாலும் தவறின்றி வாழ்பவனை, பிறருக்கு தீங்கு செய்யாத, மனதளவில்கூட தீங்கு நினையாதவனை உண்மையுள்ளவன் என்று சொல்லுகிறோம்.
பரிசுத்தவேதமும் அப்படியே சொல்லுகிறது.

தேவ உறவு, குடும்பவாழ்க்கை, ஊழியம், தனிமனித ஒழுக்கம், பணம், பேச்சு, செயல், பிறரை நேசித்தல் என அனைத்து காரியத்திலும் மோசே நேர்த்தியாய் தவறிழைக்காது வாழ்ந்தார். அதனாலேயே கர்த்தரால் உண்மையுள்ளவனென அழைக்கப்பட்டார்.
பணப்புழக்கம் அற்ற அன்நாட்களில், ஜனங்கள் பொருட்களையே பண்டமாற்று செய்தார்கள். பணத்திற்கீடாக பொருட்களே பயன்படுத்தப்பட்டன. உண்மையுள்ள பணிவிடைக்காரனாகிய மோசேக்கு பணத்தின் மீதிருந்த மனப்பாண்மை என்ன என்பதை சுருக்கமாக ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

எகிப்த்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டுச் சென்ற இஸ்ரவேலருக்கு, கர்த்தர் மோசேயைக் கொண்டு செய்த அற்புதங்கள், வழிநடத்தல்கள் அனைத்தும் ஆச்சரியப்படக்கூடிய புதிய அனுபவங்களாயிருந்தன.
இஸ்ரவேல் ஜனங்கள் சீனாய் வனாந்திரத்தை வந்தடைந்ததை யாத்திராகமம் 19ம் அதிகாரத்தில் வாசிக்கலாம். கிறிஸ்தவர்களுக்கும் ஒட்டுமொத்த மனுக்குலத்துக்கும் இயேசுக்கிறிஸ்துவின் மலைப்பிரசங்கமாகிய மத்தேயு 5, 6, 7 அதிகாரங்கள் எவ்வளவு முக்கியமோ அதுபோல அன்றைய இஸ்ரவேலருக்கு சீனாய் மலையிலிருந்து மோசே கொண்டுவந்த செய்தி முக்கியமானதாயிருந்தது. மோசே எட்டுத்தடவைகள் மலையிலேறி தேவ செய்தி கொண்டுவந்தாரென வேத அறிஞர்கள் சொல்லுகிறார்கள். அவை யாத்திராகமம் 19-34 ம் அதிகாரத்துக்குள் நடைபெற்றுள்ளன. அந்த மலையில் கர்த்தர் இறங்கும் பொழுது இடிமுழக்கம் மின்னல், எக்காளசத்தம் போன்றன கேட்கும், அப்பொழுது ஜனங்கள் அச்சத்தில் நடுங்குவார்கள். கர்த்தர் அக்கினியில் இறங்கினபடியால் மலை முழுதும் புகைக்காடாய் இருக்கும். இப்படிப்பட்ட மகிமையான தேவப் பிரசன்னத்துக்குள் சென்று வந்த மோசேயிடம் கொஞ்சமேனும் பெருமையோ தலைக்கனமோ தொற்றிக் கொள்ளவில்லை. அப்படிப்பட்ட மோசேயை மக்கள் மதித்தார்கள்.
அவர் சொல்வதெல்லாம் உண்மையென நம்பினார்கள்.

இதுவரையும் மனச்சாட்சிப்படி வாழ்ந்த இஸ்ரவேல் மக்களை, பரிசுத்தமும், நீதியும், தெய்வ பயமுள்ள நன்நெறியுள்ள வாழ்க்கைக்குள் வழிநடத்த, தேவன் சீனாய் மலையில் வைத்து மோசேக்கு நியாயப்பிரமாணத்தை சொல்லிக் கொடுத்தார். நீதியான அரசு, காவல்துறை, நீதிமன்றம், சட்டத்துறை, சீரான நிர்வாகம் போன்றவையற்ற காலத்தில், தேவன் கொடுத்த சட்டங்களின் தொகுப்பே நியாயப்பிரமாணமாகும். கிறிஸ்தவ நாடுகள் பல இதை அடிப்படையாக வைத்தே, ஆரம்ப காலங்களில் தமது நாட்டுச் சட்டங்களை உருவாக்கி வைத்துள்ளார்கள். அவ்வாறு உருவாக்கிய நாடுகளில், தனிமனித சுதந்திரம், ஜனநாயகம், மனிதநேயம், சுயமரியாதை போன்றன கடைப்பிடிக்கப்படுகின்றன.
இஸ்ரவேல் மக்களின் சமய வாழ்க்கையை நெறிப்படுத்துவதற்காகவும், அவர்கள் மத்தியில் வாசம் செய்யப் பிரியப்பட்ட தேவன் ஆசாரிப்புக்கூடாரத்தை உண்டுபண்ணச் சொன்னார். ஆசாரிப்புக்கூடாரம், உடன்படிக்கைப் பெட்டி, கேரூபீன்கள், கிருபாசனம், மேசை, குத்துவிளக்கு, பலிபீடம், தூபபீடம், திரைச்சீலை, காணிக்கை, பலிகள், பண்டிகைகள், ஆசாரியனுக்கான உடை போன்றனவற்றைக் குறித்து சீனாய் மலையில் வைத்து மோசேக்கு எடுத்துக்கூறியதோடு, கர்த்தர் அவற்றை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும், யாரைப் பொறுப்பாக நியமிக்க வேண்டுமென்பனவற்றையும் சொல்லிக்கொடுத்தார். ஆசாரிப்புக்கூடாரத்தையும், ஏனைய பொருட்களையும் உண்டாக்குவதற்கு பயன்படுத்தும் மூலப்பொருட்களையும், அதன் அளவுகளையும், அதற்கு பணி செய்யும் நபர்களின் பெயர்களையும் மோசேயிடம் கர்த்தர் எடுத்துச் சொன்னார்.
தேவையான பொருட்களை இஸ்ரவேல் மக்களிடமிருந்து காணிக்கையாக பெற்றுக்கொள்ளும்படியும் கூறினார்.

மோசே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லோரையும் நோக்கி:
உங்களுக்கு உண்டானதிலே கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்; கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கை என்னவென்றால், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும், இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டு மயிரும், சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும், விளக்குக்கு எண்ணெயும், அபிஷேக தைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும், ஆசாரியருடைய ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கத்தக்க கோமேதகம் முதலிய இரத்தினங்களுமே.
உங்களில் ஞானஇருதயமுள்ள அனைவரும்வந்து, கர்த்தர் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வார்களாக என்றதோடு, இவற்றைக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறினார்.
கர்த்தர் மோசேயைக் கொண்டு கற்பித்த வேலைக்குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேல் புத்திரருக்குள் தங்கள் இருதயத்தில் உற்சாகமடைந்த ஸ்திரீ புருஷர் யாவரும் கர்த்தருக்குக் காணிக்கைகளை மனப்பூர்வமாய்க் கொண்டுவந்தார்கள்.
ஒருகட்டத்தில், பரிசுத்த ஸ்தலத்தின் வேலைக்குரிய பொருட்கள் போதியளவு கிடைத்து விட்டதாக அப்பணியில் இருந்தவர்கள் மோசேயிடம் தெரிவித்தார்கள்.
அதைக் கேட்ட மோசே பொருட்கள் கொண்டுவருவதை நிறுத்தும்படி கட்டளையிட்டார்.

இங்கே இரண்டு காரியம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியுள்ளது.
1. மக்கள் தாராளமாய் மனமுகந்துகொடுத்தமை.
2. போதும், நிறுத்துங்களென மோசே கட்டளையிட்டமையுமாகும்.

மோசேமீதிருந்த நம்பிக்கையே மக்கள் மனமுகந்து, தாராளமாக கொடுக்க முக்கிய காரணமாகும்.
மோசே காணிக்கை கேட்கும் போது, கட்டாயமாக காணிக்கை கொண்டு வாருங்களென்றோ, அச்சுறுத்தியோ, மூளைச்சலவை செய்தோ கேட்கவில்லை. மனமுள்ளவன் எவனோ கொண்டுவரட்டும் என்றே அறிவித்தார்.
மோசே பொருளாசையினாலோ அல்லது தனது சுயதேவைக்காகவோ காணிக்கை கேட்கவில்லை.
கர்த்தர் கட்டளையிட்டவற்றை நிறைவேற்றுவதற்காக கேட்டாரென்பதை மக்கள் உணர்ந்திருந்தார்கள்.
இஸ்ரவேல் மக்களின் நலனுக்காக, மோசே தனிப்பட்ட தனது வாழ்க்கையை தியாகம் செய்திருந்தார். மரணபயமின்றி எகிப்த்திய பார்வோனிடம் ஜனங்களை விடுதலை செய்யும்படி துணிந்து சென்று பேசியது பிரதானமானது.
யாத்திராகமம் 18ம் அதிகாரத்தில் மோசேயின் மாமனாரும் மனைவி பிள்ளைகளும் மோசேயிடம் வந்ததையும் பின்னர் திரும்பிச் சென்றதையும் வாசிக்கிறோம். மோசேயோடு தொடர்ந்து தங்கியிருந்தார்கள் என்பதற்கான ஆதாரம் வேதத்தில் இல்லை.
1 நாளாகமம் 23:14-16 ல் மோசேயின் பேரப்பிள்ளைகள் குறித்து வாசிக்கிறோம். ஆகவே முதல் தடவை திரும்பிச் சென்றவர்கள், பிறிதொரு காலத்தில் இணைந்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்களை வழிநடத்துவதற்கு, தனது குடும்பம் தடையாக இருக்கக் கூடாதென்பதற்க்காக, குடும்பத்தை பிரிந்து தியாகமாக வாழ்ந்தவர் மோசே.
யாத்திராகமம் 35:19ல் ஆரோனுக்கும் அவர் பிள்ளைகளுக்கும் ஆசாரியர்களுக்கான உடைகளைத் தைக்க வேண்டுமென சொன்ன மோசே, தனக்காக எதையும் கேட்கவில்லை என்பதையும் மக்கள் கவனித்திருப்பார்கள்.
கன்றுக்குட்டியை உண்டாக்கியதன் நிமிர்த்தம் இஸ்ரவேல் மக்களை அழித்து மோசேயை பெரிய ஜாதியாக்குவேனென்று கர்த்தர் சொன்ன வேளையிலும் இஸ்ரவேல் மக்களுக்காக பரிந்து பேசியவர், அவ்வாறு செய்யப்படுமாயின் தன்னுடைய பெயரையும் கிறுக்கிப் போடும்படி கேட்டுக்கொண்டவராகும்.
எண்பது வயசிலும் சலிப்பின்றி, உற்சாகமாக மலையேறி மக்களுக்கான தேவ செய்தியை கர்த்தரிடமிருந்து பெற்றுக் கொண்டுவந்ததையும் மக்கள் அவதானித்துக் கொண்டிருந்தார்கள். இச் சம்பவங்களே இஸ்ரவேல் ஜனங்கள் மோசேமீது கொண்ட நல்லபிப்பிராயத்துக்கும், நம்பிக்கைக்குமானவையாக இருந்தன.

மோசே போதும் நிறுத்துங்கள் எனக் கட்டளையிட்டதானது, கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்ததையும், உலக ஐஸ்வரியத்தின்மீதும், பொருளின் (பணத்தின்) மீதும் பற்றற்ற தன்மையையே எடுத்துக்காட்டுகிறது.
ஜனங்கள் கொண்டுவரும் காணிக்கையை காலைதோறும் பெற்றுக்கொண்ட மோசே, வேலை செய்பவர்களிடம் போதியளவு சேர்ந்துவிட்டால் தனக்கு தெரியப்படுத்தும்படி சொல்லிவைத்திருப்பார். ஜனங்கள் பலதரப்பட்ட பொருட்களை கொண்டுவந்திருப்பார்கள். மோசே கர்த்தர் அறிவுறுத்திய பொருட்களை மட்டும் பெற்று, மீதியானவற்றை திருப்பியனுப்பியிருப்பார். மேலதிகமாக பொருட்கள் சேர்ந்துவிட்டதென்ற செய்தியை கேட்ட போது, அப்பொருட்களை வேறு காரியங்களுக்கு பயன்படுத்தலாமென்றோ அல்லது வேலை செய்வோருக்கு கூலியாக கொடுக்கலாமென்றோ மோசே நினைத்ததில்லை. தன்னுடைய குடும்பத்துக்காக கொஞ்சத்தை எடுத்து சேமித்து வைக்கலாமென்றோ, இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்களின் வருங்காலத்துக்கு தேவைப்படுமென எண்ணி, முன்னேற்பாடாக மாமனாகிய எத்திரோவின் வீட்டிற்கு அனுப்பி வைக்கலாமென்றோ மோசே நினைத்ததில்லை. தனது தனிப்பட்ட, குடும்ப தேவையை பூர்த்தி செய்ய காணிக்கையை பயன்படுத்த எண்ணியதேயில்லை.

முழுமையாக கர்த்தரைச் சார்ந்து வாழ்ந்த மோசேக்கு பணமோ, காணிக்கையோ மனித கனமோ ஒரு பொருட்டாயிருக்கவில்லை. மோசே தன்னையே கர்த்தருக்கு காணிக்கையாக கொடுத்ததால் கடவுளுக்காக செலுத்தும் பொருட்களை (காணிக்கை) அபகரிக்கவோ, அனுபவிக்கவோ மோசேக்கு எண்ணமில்லை.

அழைக்கப்பட்ட பணிவிடைக்காறனாகிய மோசே, கர்த்தருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான்.
அரண்மனையில் இளவரசனைப் போல் வாழ்ந்த போது, ராஜபோக (சுகபோக) வாழ்க்கையை சினேகிக்கவில்லை.
வனாந்திரத்தில் மாமன் எத்திரோவின் ஆடுகளை மேய்த்த போதும், ஒரு ஆட்டைக்கூட இச்சித்ததில்லை.
பல லட்சம் ஜனங்களை ஒரு தலைவனாய், கர்த்தரின் பிரதிநிதியாய் வழிநடத்திய போதும், தானொரு அதிபதியைப் போல ஜனங்கள் மீது அதிகாரம் செலுத்தாமல் தனது சொந்த உறவுகளைப் போல் நேசித்து தியாகமாக அர்ப்பணிப்போடு கானான் சென்றுவிட வேண்டுமென்ற உயரிய நோக்கத்தோடு வாழிநடத்திக் காட்டினார்.

அழைக்கப்பட்ட ஒரு ஊழியக்காறன் பணத்தை நேசிக்கமாட்டான்.
உண்மையுள்ள ஒரு மனுஷன் பணத்தை நேசிக்கமாட்டான்.
கர்த்தரைச் சார்ந்து வாழும் ஒரு மனுஷன் பணத்தை நேசிக்கமாட்டான்.
பணத்தை மனிதனே கையாளவேண்டும், பணம் மனிதனை கையாளவோ, வழிநடத்தவோ, ஆளுகை செய்யவோ கூடாது.

என்னை மீட்டு நேசிக்கும் நல்ல தேவனுக்கு, என்னையே காணிக்கையாக அர்ப்பணிக்கிறேன். எனக்குண்டானவை அனைத்தும் கர்த்தரால் வந்தது, அவையனைத்தும் அவருக்கே சொந்தமென்ற தெளிவோடு ஜீவிப்போமாக.

மோசே பொருளாசை, பண ஆசையற்று வாழ்ந்தது போல நாமும் வாழ்வோமாக.
உண்மையுள்ளவனென்று உங்களையும் என்னையும் கர்த்தர் அழைப்பாராக. ஆமென்.

நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. எபிரெயர் 13:5

நன்றி கர்த்தாவே

த. பிரபா

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved